மேற்கத்திய ஊடகங்களில் என்ன சொல்லப்படுகிறது?

மேற்கத்திய நாடுகளும் ஹனியேவின் மரணத்திற்குப் பிந்தைய நிலைமை குறித்துக் கவலையடைந்துள்ளன. அதன் பிரதிபலிப்பு அங்குள்ள ஊடகங்களிலும் தெளிவாகத் தெரிகிறது.

“ஹமாஸ் தலைமையின் படுகொலைக்குப் பிறகு, இரான் பழிவாங்குவது குறித்துப் பேசியது. அதே நேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சுகளுக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக,” வாஷிங்டன் போஸ்ட் எழுதியது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் பதற்றத்தைக் குறைக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று செய்தித்தாளின் இணையதளம் கூறுகிறது.

நியூ யார்க் டைம்ஸ் மத்திய கிழக்கின் பதற்றத்தை அதன் முக்கிய செய்தியாக வெளியிட்டுள்ளது. ‘மத்திய கிழக்கில் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும் கொலைகள் பைடனின் அமைதிக்கான நம்பிக்கையைச் சிதைக்கிறது’ என்ற தலைப்பில் செய்தி அது வெளியிடப்பட்டுள்ளது.

‘அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இப்போது அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார். காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் செளதி அரேபியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் ஒரு வரலாற்று ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கும் தனது மீதமுள்ள பதவிக் காலத்தைச் செலவிடலாம் என்று அவர் நினைத்தார். ஆனால் அது தற்போது கடினமாகி வருவதாகத் தெரிகிறது,” என்று நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.

”இரானில் இஸ்மாயில் ஹனியேவை கொன்றதன் மூலம் இஸ்ரேல், அந்தப் பிராந்தியத்தில் உறுதியற்ற தன்மையை எதிர்பாராத புதிய நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.”

”லெபனானில் உள்ள ஹெஸ்புலா மீதும், பதிலடி நடவடிக்கை எடுக்க தெஹ்ரான் மீதும் அழுத்தம் அதிகரித்துள்ளது. ஒரு விரிவான போரைத் துவக்குவது தன் இலக்கு அல்ல, ஆனால் தாங்கள் அதற்குத் தயாராக இருப்பதாக லெபனானில் வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய ராணுவம் கூறியது,” என்று கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.